பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றக் கூட்டம், ஏறத்தாழ இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் இன்று இரவு நிறைவடைந்தது.
மாலை 5.30 மணியளவில் தொடங்கிய கூட்டத்துக்கு, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் நடைபெற்ற கூட்டம், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் மீதமுள்ள சிறைத் தண்டனையை நிபந்தனையுடன் வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதித்துள்ள விவகாரம் மற்றும் பாரிசான் நேஷனலின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து அரசியல் கவனம் அதிகரித்துள்ள நிலையில் நடைபெற்றது.
ஒற்றுமை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவோர் நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோர வேண்டும் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் பாரிசான் நேஷனலுடனான உறவு குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








