நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு, துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை யாங் டிபெர்துவான் பெசார் பதவியில் இருந்து நீக்கும் பிரகடனத்தை அங்கீகரித்திருப்பது அரச குடும்ப அமைப்பின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
சிரம்பான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் அந்தப் பிரகடனத்தையும் புதிய ஆட்சியாளரையும் உடனடியாக அங்கீகரித்திருப்பது சட்டத்திற்கு அப்பாற்பட்ட முடிவு என்று கூறியுள்ளார்.
அதேவேளையில் மாநில அரசியலமைப்பையோ அல்லது உண்டாங் தலைவர்கள் பேரவையான டிகேயுவின் முடிவுகளையோ, ஆட்சிக் குழுவானது மீற முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நெகிரி செம்பிலான் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் முறையான சட்ட நடைமுறையின்றி யாங் டிபெர்துவான் பெசாரைத் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் அந்தோணி லோக் விளக்கமளித்துள்ளார்.








