நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை மாநில நிர்வாகக் குழு ஒருமனதாக உறுதி செய்துள்ளதாக இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில ஆட்சியாளர் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட மாநிலச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் படி, கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி துவாங்கு முஹ்ரிஸை நீக்கியதாக கூறப்படும் பிரகடனம் செல்லுபடியாகும் என்றும், துவாங்கு நட்ஸாருசின் துவாங்கு ஜாஃபார் புதிய யாங் டிபெர்துவான் பெசாராக அங்கீகரிக்கப்படுவதாகவும் மாநில ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது. இஸ்மாயில் லாசிம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில அரசு நேற்று அறிவித்தது.
என்றாலும், உண்டாங் தலைவர்கள் பேரவையான டிகேயு இதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
துவாங்கு முஹ்ரிஸ் தொடர்ந்து நெகிரி செம்பிலான் ஆட்சியாளராகவே உள்ளார் என்றும், ஆட்சிக் குழுவின் அறிவிப்புக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்றும் டிகேயு கூறியுள்ளது.
இந்த விவகாரம் சிரம்பான் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அனைத்து தரப்பினரும் சட்ட நடைமுறையை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இஸ்மாயில் லாசிம்தான் துவாங்கு முஹ்ரிஸை நீக்கும் ஆவணத்தில் கட்டாயப்படுத்தப்பட்டு கையெழுத்திட்டதாக கூறியிருந்த நிலையில், தற்போது ஆட்சிக் குழு எடுத்த ஒருமனதான முடிவை அவர் உறுதி செய்திருப்பது விவகாரத்தில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.








