2014-ஆம் ஆண்டு பாரிசான் நேஷனல் அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா தமது கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்ததாகக் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுத் தொடர்பில் தமக்கு எதிராக வழக்குத் தொடரப்படுமா என்பதை அரசு வழக்கறிஞரே முடிவு செய்ய வேண்டும் என்றும், வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றால் அங்கு ஆதாரங்களை முன்வைப்போம் என்றும் அவர் கூறினார்.
அப்துல் ஹாடி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அறிக்கையை வெளியிட்டதாகக் கூறி குற்றவியல் சட்டத்தின் 505(b) பிரிவின் கீழும், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233-வது பிரிவின் கீழும் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மலேசியப் பயணத்தின் போது கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரக நிகழ்வொன்றில் பாஸ் தலைவர்கள் அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்கத் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மலேசியாவின் அரசியல் தலைமையைத் தீர்மானிக்க அமெரிக்கா ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்றும், அதற்கு மாறான எந்தக் கூற்றும் பொய்யானது என்றும் தூதரகப் பொறுப்பாளர் டேவிட் எச். கேம்பிள் ஜூனியர் தெரிவித்துள்ளார்.








