ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிகள் வழக்கம் போல இவ்வாண்டும் நடைபெறுமென சரவாக் மாநிலம் அறிவித்துள்ளது.
என்றாலும், மிதமான அளவில் குறைந்த செலவிலேயே அவை ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில சுற்றுலா, படைப்பாற்றல் தொழில் மற்றும் நிகழ்த்துக் கலை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிகளை இரத்து செய்யும் மத்திய அரசின் உத்தரவானது, சரவாக் மாநிலத்திற்குப் பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு சில முடிவுகளை எடுக்கலாம், ஆனால் சரவாக் மாநில அரசாங்கம் மற்றும் அதன் முகமைகளைப் பொறுத்தவரையில், தனக்கென சில வழிமுறைகளை வகுத்துள்ளது என்றும் அப்துல் கரீம் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போர் காரணமாக செலவுகளை மிச்சப்படுத்தும் நோக்கில், இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடந்த வாரம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








