கோலாலம்பூர், பிப்ரவரி.13-
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினால் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினுக்கும், ஹம்ஸா ஸைனுடினுக்கும் இடையே நிலவி வந்த தலைமைத்துவப் போட்டிக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹம்ஸா ஸைனுடின் கட்சியின் அரசியலமைப்பின் 9.1.4 பிரிவை மீறியதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கண்டறிந்துள்ளது.
லாருட் எம்.பி.யான ஹம்ஸா ஸைனுடினின் இந்த நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இருப்பினும், 14 நாட்களுக்குள் மேல்முறையீட்டு வாரியத்திடம் முறையிட வாய்ப்பு உள்ளது என ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் ராட்ஸி மனான் தெரிவித்துள்ளார்.
ஹம்ஸா ஸைனுடினின் நீக்கத்தைக் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களும், பொதுச் செயலாளர் அஸ்மின் அலியும் உறுதிப்படுத்தியுள்ளனர்.








