நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள இஸ்மாயில் லாசிம், தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே கட்சிக்குள் அதிகாரப் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவரது பதவியேற்பு விழாவில் சில அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காதது, கட்சிக்குள் அதிருப்தி மற்றும் அதிகாரப் போட்டிக்கான அறிகுறியாக இருப்பதாக அகாடெமி நுசாந்தரா-வைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரான அஸ்மி ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், மந்திரி பெசார் பதவிக்கான முன்னணி வேட்பாளராக இஸ்மாயில் லாசிம்-ன் பெயர் இதற்கு முன் பேசப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளையில், ஆசியா குழுமத்தின் உதவித் தலைவரான அஸ்ருல் சானி-யின் கருத்துப்படி, யாங் டி பெர்துவான் பெசார் நியமித்துள்ள இஸ்மாயில் லாசிம்-ன் பதவிக்கு உடனடி அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பில்லை என்ரும் அடுத்த பொதுத் தேர்தலை முன்னிட்டு நிலையான அரசாங்கத்தை வழங்கும் தோற்றத்தை அம்னோ மற்றும் பெரிகாத்தான் நேஷனல் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இஸ்மாயில் லாசிம்-ஐ தேர்தலுக்கு முன்பே மாற்ற முயன்றால், அம்னோ-வில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற தோற்றம் உருவாகி, மலாய் அரசியல் ஒத்துழைப்பு குறித்த கட்சியின் வாதம் பலவீனமடையும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.








