நெகிரிசெம்பிலான் மாநில தேர்தலையொட்டி, ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் கடந்த ஒரு வார காலமாக சூறாவளிப்பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜி. ராஜசேகரன், இதுவரை மக்களிடம் கிடைக்கப்பெற்ற வரவேற்பு, ஆதரவு நேர்மறையாக உள்ளதாக குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாநில அரசாங்கம், மக்கள் நலனில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு இருக்கிறது என்பதை வாக்காளர்களை நேரில் சந்தித்த போது உணர முடிகிறது என்று ஸ்ரீ தஞ்சோங் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் டாக்டர் ராஜசேகரன் குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போர்ட்டிக்சனை உள்ளடக்கிய ஸ்ரீ தஞ்சோங்கின் துரித வளர்ச்சியினால் அது ஒரு முக்கிய மையமாக மாறி வருகிறது என்பதற்கு வார இறுதி நாட்களில் இரண்டு லட்சம் வாகனங்கள் நுழைவதே இதற்கு தக்க சான்றாகும் என்றார்.
இதனிடையே மாநில தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் வேளையில் பாஸ் கட்சியை சேர்ந்த பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநர் சனூசி நோர், சீனர்களுக்கும், இந்தியர்களுக்கும் தங்களுகென்று, சொந்தமாக இந்தியா, சீனா போன்ற நாடுகள் இருப்பதாக இனவாதத்துடன் பேசியிருக்கும் செயலை டாக்டர் ராஜசேகரன் கண்டித்தார். அவரின் இந்த இனவாதப் பேச்சு, எத்தகைய துவேஷமானது என்பதை பாரிசான் நேஷனலில் உள்ள இந்தியர்கள் உணர வேண்டும் என்று டாக்டர் ராஜசேகரன் குறிப்பிட்டார்.
கடந்த முறை மூவாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற டாக்டர் ராஜசேரன், இம்முறை ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் ஐந்து முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.








