ஜோகூர் பாரு, ஜூன்.28-
கடந்த தேர்தலில் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், இம்முறை புக்கிட் பத்து சட்டமன்றத் தொகுதியை பக்காத்தான் ஹரப்பான் மிக உறுதியாகத் தக்கவைத்துக் கொள்ளும் என்று பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக மீண்டும் களத்தில் குதித்துள்ள ஆர்தர் சியோங் அசைக்க முடியாத நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது இனம், மதத்திற்கான அரசியல் அல்ல என்று கூறிய 36 வயதான இந்த இளம் பிகேஆர் வேட்பாளர், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே தங்களின் ஒரே நோக்கம் என அதிரடியாகத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் பலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களின் தேர்தல் இயந்திரம் வாக்காளர்களை நேரடியாகச் சென்றடைந்து மக்களின் பேராதரவோடு மீண்டும் ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும் என ஆர்தர் சியோங் துணிச்சலுடன் களமிறங்கியுள்ளார்!
"அதேவேளையில், பாரிசான் நேஷனல் வேட்பாளர் உட்பட இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்துத் தரப்பினரும் மக்கள் நலனை முன்னிறுத்தி, ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று தாம் முழுமையாக நம்புவதாக ஆர்தர் சியோங் மிகவும் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டுள்ளார்."
புக்கிட் பத்து தொகுதியில் இம்முறை ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. ஆர்தர் சியோங்கிற்கு எதிராக பாரிசான் நேஷனலின் ஆர்.கே.குமரன், மூடா கட்சி சார்பில் எம்.பிரேமானந்த், PBM சார்பில் ஜி.தமிழிலி மற்றும் சுயேச்சை வேட்பாளர் கமருஜாமான் அலி ஆகியோர் களம் காண்கின்றனர்.








