ஜோகூர் பாரு, ஜூன்.28-
ஜோகூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்துவதே தங்களின் முதன்மை இலக்கு எனப் புத்ரி வங்சா சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் மஸ்லீ மாலிக் அறிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத்தின் அனைத்துப் பகுதி மக்களும் சமமான பலன்களைப் பெறும் வகையிலான புதியதொரு சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு பார்வையை டாக்டர் மஸ்லீ மாலிக் முன்வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், பக்கத்தான் ஹரப்பானின் முக்கிய நோக்கமே எளிய மக்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதுதான் என்று உறுதிபடக் கூறினார். இந்தத் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று, ஒட்டுமொத்த ஜோகூர் மாநிலத்திற்கும் ஒரு புதிய மேம்பாட்டு அத்தியாயத்தைக் கொண்டுவரத் தான் தீவிரமாக உழைக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.
ஜோகூர் மாநிலத்தின் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் மட்டுமே சுருங்கி விடக்கூடாது என்பதில் மஸ்லீ மாலிக் உறுதியாக உள்ளார். "நாம் விரும்பும் ஜோகூர், அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீரான வளர்ச்சியைப் பெற வேண்டும். வளர்ச்சி என்பது தெற்கு ஜோகூரில் மட்டும் குவிந்திருக்கக்கூடாது; ஒவ்வொரு சாதாரண குடிமகனும் சிறந்ததொரு வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்க வேண்டும்," என அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் கல்வி அமைச்சரான மஸ்லீ மாலிக், இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பல ஆக்கப்பூர்வமான பொருளாதாரத் திட்டங்களை வகுத்துள்ளார். மாநிலத்தில் புதிய மற்றும் வியூக முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் அதிக சம்பளத்துடன்கூடிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம், சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் போன்ற வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் பணிபுரியும் ஜோகூர் இளைஞர்கள் மீண்டும் தங்களின் சொந்த மண்ணிற்கே திரும்பி, குடும்பத்துடன் தங்கிப் பணியாற்ற வழிவகை செய்யப்படும் என்றார்.








