ஜோகூர் பாரு, ஜூன்.28-
ஜோகூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், மாச்சாப் தொகுதி மக்களின் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த மாநில அளவிலும் மத்திய கூட்டரசு அளவிலும் இணக்கமான ஒரு புதிய நல்ஆட்சி அமைய வேண்டும் என அத்தொகுதியில் அமானா சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய 41 வயது நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான், மாச்சாப் தொகுதி மக்கள் தங்களின் எதிர்காலத்திற்காக ஒரு புதிய நம்பிக்கையையும், தற்போதைய சூழலை விட மிகச் சிறந்ததொரு புதிய அரசாங்கத்தையும் ஆவலோடு எதிர்நோக்கி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஜோகூர் இடைக்கால மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபீஸ் காஸிக்கு எதிரான நேரடி இருமுனைப் போட்டி குறித்துப் பேசிய நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான், இந்தத் தேர்தல் களம் தமக்குச் சவாலானது அல்ல என்றும், மாச்சாப் மக்களுக்கு உண்மையாகப் பணியாற்றிப் பாடுபடத் தாம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், வாக்காளர்களின் பேராதரவு இன்றித் தனி ஆளாகப் போராடுவது கடினம் என்பதால், வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் வாழும் மாச்சாப் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று தவறாமல் தாயகம் திரும்பி, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களித்து தங்களின் மாபெரும் மக்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் நூர் ஹாஃபிஸ் ரோஸ்லான் உருக்கமாகக் கேட்டுக் கொண்டார்.








