ஜோகூர் பாரு, ஜூன்.28-
ஜோகூர் மாநிலம் கோத்தா திங்கி பகுதியில் உள்ள ஃபெல்டா குகுசான் அடேலா நுழைவாயிலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் கொடி எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு அக்கூட்டணி கடும் வருத்தம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தஞ்சோங் சூராட் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஃபைஸுல் அப்துல் கானி கூறுகையில், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கட்சியின் தளவாடப் பிரிவு தலைவர் இச்சம்பவத்தை கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தனது பிரதிநிதியான முஹமட் சாட் சுகாமி போலீசிலும், தேர்தல் ஆணையத்திலும் அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தூண்டுதல், சேதப்படுத்துதல் அல்லது மேம்பட்ட ஜனநாயகக் கலாச்சாரத்தைச் சீர்குலைக்கும் செயல்களாக வெளிப்படுத்தக்கூடாது என அவர் தனது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசாரும், தேர்தல் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








