Apr 19, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸ் அரசியல் குழப்பத்தின் எதிரொலி: பெரிக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முகைதீன் அறிவிப்பு
அரசியல்

பெர்லிஸ் அரசியல் குழப்பத்தின் எதிரொலி: பெரிக்காத்தான் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முகைதீன் அறிவிப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்.30-

பெரிகாத்தான் நேஷனல் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக டான் ஶ்ரீ முகைதீன் யாசின் அறிவித்துள்ளார்.

பெர்சாத்து கட்சியின் தலைவருமான முகைதீன் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தனது பதவி விலகலானது, வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், முகைதீன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தனக்கு ஆதரவு வழங்கிய பெரிகாத்தான் தலைமையினருக்கு நன்றி தெரிவித்துள்ள முகைதீன், கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சியினருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

பெர்லிஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக, பெர்சாத்து, பாஸ் கட்சிகளுக்கு இடையில் கடந்த வாரம் முதல் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.

நிலவி வரும் அரசியல் குழப்பத்துக்கு பெர்சாத்து கட்சியே காரணம் என சில பாஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, முகைதீனுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக முகைதீன், பதவி விலகும் முடிவை எடுத்துள்ளதாக நம்பப்படுகின்றது.

கடந்த வாரம், பெர்லிஸ் மாநில முன்னாள் மந்திரி பெசார் முஹமட் ஷுக்ரி ரம்லி, உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பதவி விலகியதையடுத்து, புதிய மந்திரி பெசாராக அபு பாக்கார் ஹம்ஸா கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.

புதிய மந்திரி பெசார் பதவிப் பிரமாணத்தின் போது, பெர்லிஸ் மாநில ராஜா துவாங்கு சையிட் சிராஜுடின் ஜமாலுலாயில், பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News