கோலாலம்பூர், அக்டோபர்.26-
47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக, மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உலகெங்கிலும், குறிப்பாகக் காசா பகுதியில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆற்றி வரும் பங்கிற்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். உலகிற்குத் தேவைப்படும் முழுமையான அமைதியை உறுதிச் செய்வதில் டிரம்ப் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கமாக, நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினைக் கொண்டிருந்த தாய்லாந்து - கம்போடியா ஆகிய நாடுகள் கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுப் பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள உறுதி பூண்டன. இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul, தங்கள் வசம் உள்ள 18 கம்போடிய இராணுவ வீரர்களை விடுவிக்கும் நடவடிக்கையைத் தொடங்குவதாகவும் அறிவித்தார்.
மேலும், தாய்லாந்து-கம்போடியா நாடுகளைப் பேச்சு வார்த்தைக்குக் கொண்டு வந்ததில் அன்வார் இப்ராஹிம் ஒரு முக்கியப் பங்கை வகித்ததாக அதிபர் டிரம்ப் பாராட்டினார். அமைதி, நிலைத்தன்மைக்கான மலேசியாவின் உறுதியான அர்ப்பணிப்பு காரணமாகவே இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க அரச தந்திர வெற்றியைப் பெற முடிந்தது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.








