நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மையான தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகச் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த முறை ஜோகூர் மாநில மக்களுக்காகப் பக்காத்தான் ஹராப்பான் வெளியிட்டுள்ள 10 அம்சத் தேர்தல் கொள்கை அறிக்கையானது, மக்களின் நல்வாழ்வு, புதிய வேலை வாய்ப்புகள், வளமான வாழ்வாதாரம் மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்யப் போதுமானதாகும் என்று சுட்டிக்காட்டிய பாபாராய்டு, இத்திட்டங்கள் அனைத்தும் ஜோகூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மக்களின் விடியலுக்கும் வலுவான அஸ்திவாரமாக அமையும் என்றார்.
குறிப்பாக, ஜோகூர் மக்களின் சுகாதாரக் காப்புறுதித் திட்டம், முதல் வீடு வாங்குபவர்களுக்கான 8 ஆயிரம் ரிங்கிட் முன்பண உதவி, பொதுப் போக்குவரத்திற்கு வெறும் 50 ரிங்கிட்டிலான மாதாந்திரப் பயண அட்டை, வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஜோகூருக்குத் திரும்பும் திட்டம் மற்றும் இளையோர்களுக்கான 500 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி உள்ளிட்ட கவர்ச்சிகரமான சலுகைகள் அம்மாநில மக்களுக்குப் பெரும் பயனளிக்கவல்லவையாகும் என்று பாபாராய்டு சுட்டிக்காட்டினார்.
எனவே இத்தேர்தலில் ஜோகூர் மக்கள் பக்காத்தான் ஹராப்பானைப் பெருவாரியான தொகுதிகளில் தேர்ந்தெடுப்பார்கள் என்று தாம் ஆழமாக நம்புவதாகவும் பாபாராய்டு தெரிவித்தார்.








