செனாய் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 4 ஆண்டுகள் 2 மாதங்கள் தாம் ஆற்றிய மக்கள் சேவையே, வரவிருக்கும் தேர்தலில் தமது வெற்றிக்கு மிக முக்கிய அடித்தளமாக அமையும்,” என செனாய் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் வோங் போர் யாங் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலில் ஜசெக சார்பில் செனாய் தொகுதியைத் தற்காக்கப் போட்டியிடும் வோங் போர் யாங், தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தாம் மக்களைச் சந்தித்து ஆதரவு கோரியபோது, அவர்கள் தமக்கு வழங்கி வரும் பேராதரவும் வரவேற்பும் பெரும் உற்சாகத்தையும் புதிய தெம்பையும் தருகிறது. தொகுதி மக்களின் நல்வாழ்விற்காகவும், செனாயின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும் தாம் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக வோங் போர் யாங் குறிப்பிட்டார்.
நான் தொகுதிக்குச் செய்த நற்பணிகளின் உண்மையான அளவுகோலாக வரவிருக்கும் சனிக்கிழமை தேர்தல் அமையவுள்ளது. எனவே, செனாய் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் எவ்விதத் தொய்வுமின்றித் திரளாக வந்து, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் எனக்கும் உங்களது பேராதரவை வழங்கி, என்னை மீண்டும் அமோக வெற்றபெறச் செய்ய வேண்டும் என்று வோங் போர் யாங் மிக உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.








