ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெக்கோக் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் தாம், இத்தொகுதிக்குப் புதியவர் என்றும் திடீரெனத் தோன்றியவர் என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வேட்பாளர் டே யோக் ஜியுன் வன்மையாக மறுத்துள்ளார்.
ஜசெக கட்சியைச் சேர்ந்த கணிதப் பாட ஆசிரியரான டே யோக் ஜியுன், நேற்று பெக்கோக் சட்டமன்றத் தொகுதியில் கம்போங் பாரு சாஆவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தன் மீதான விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
"என்னைப் பற்றியும், பெக்கோக் தொகுதியின் வரலாற்றைப் பற்றியும் முழுமையாகத் தெரியாதவர்கள் தான் இத்தகைய உண்மைக்கு மாறான புகார்களை என் மீது முன்வைத்து வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டில் பெக்கோக் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் நான் கிராமத் தலைவராகவும் , பின்னர் சமூகத் தலைவராகவும் நியமிக்கப்பட்டதை இவ்வேளையில் நினைவூட்ட விரும்புகிறேன்" என்று டே யோக் ஜியுன் குறிப்பிட்டார்.
கடந்த எட்டு ஆண்டு காலமாகத் தொகுதி மக்களின் சேவையுடன் தம்மை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறிய அவர், வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உதவுவது, சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்த்துக் கொடுப்பது, நோயினால் அவதியுறுபவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்ப்பது மற்றும் விழாக்காலங்களில் வசதி குறைந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது எனப் பல சமூகப் பணிகளில் தாம் பெரும் பங்காற்றியிருப்பதை விளக்கினார்.
"எனவே, நான் இந்தத் தொகுதிக்கு புதியவள் அல்ல; உங்களில் ஒருத்தி. மத்திய அரசாங்கத்தின் நல்லாட்சியோடு இணைந்து, பெக்கோக் தொகுதியின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல வரவிருக்கும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் எனக்குப் பேராதரவு வழங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று டே யோக் ஜியுன் தனது உரையை உணர்ச்சிப்பூர்வமாக நிறைவு செய்தார்.








