நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள இந்திய வாக்காளர்கள் அனைவரும் பெரிய அளவில் திரண்டு வந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜசெக தேசியத் தலைவரும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்கள் ஜோகூர் மாநிலத்தின் அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். மத்திய அரசாங்கமும் ஜோகூர் மாநில அரசாங்கமும் ஒரே இலக்கை நோக்கி பயணிக்க பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் வெற்றி பெற்று மாநில ஆட்சியை வழிநடத்துவது அவசியமாகும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
இந்தியர்களின் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தில் உரிமைகளைப் பாதுகாக்கவும், சமத்துவமான பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் மிக முக்கியமானது என்று சுட்டிக்காட்டிய கோபிந்த் சிங், இத்தேர்தலில் இந்தியர்கள் தங்கள் பலத்தைக் காட்டுவதற்குப் பெரிய அளவில் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.








