நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள இந்திய வாக்காளர்கள், சமூகத்தின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, பிரித்தாளும் வெளிப்புற சக்திகளை புறந்தள்ளி, தங்களின் கூட்டு வலிமைக்கு முன்னுரிமை கொடுத்து, சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று லிங்கி சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் நெகிரி செம்பிலான் இடைக்கால மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போதைய சவால்களுக்கு மத்தியில், நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள இந்திய சமூகம், தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று 'திசைகள்' ஊடகத்திற்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் அவர் இதனை வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான், பல்லினத்தை கொண்ட ஒரு மாநிலமாகும். நாம், எப்போதும், ஒற்றுமையாகவும் வளப்பமாக வாழ வேண்டும். அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த ஒரு சூழலில், இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்குள் ஒரு வலுவான மற்றும் நிலையான பிணைப்பை உருவாக்கிக் கொள்வது மிக அவசியமாகும்.
தீவிரவாத அல்லது இனவாதக் கொள்கைகளைத் தங்களின் நிகழ்ச்சி நிரலாகக் கொண்டு செயல்படும் அரசியல் கட்சிகளைத் தேர்ந்தெடுப்பதை நெகிரி செம்பிலான் இந்திய வாக்காளர்கள் தவிர்க்க வேண்டும் என அவர் எச்சரித்தார்.

இத்தகைய தவறான அரசியல் கட்சிகளின் தேர்வுகள், தேவையற்ற வெளிப்புறப் பிரச்சினைகளை உள்ளே கொண்டு வந்து, மாநில மக்களிடையே ஒற்றுமையைக் சீர்க் குலைத்துவிடும் அபாயம் இருப்பதாக விடும் டத்தோஸ்ரீ அமினுடின் எச்சரித்தார்.
எனவே, நெகிரி செம்பிலான் இந்தியர்கள், தங்கள் நல்வாழ்வை உறுதி செய்ய, பிரித்தாளும் சக்திகளின் தாக்கங்களை முற்றாக நிராகரித்து, தங்களின் கூட்டு வலிமையைக் கொண்டு சமூக நல்லிணக்கத்தை நிலைநிறுத்த, வரும் மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்க வேண்டும் என டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் இந்திய வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.








