ஷா ஆலாம், மே.03-
அடுத்த 16-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்துப் போட்டியிடத் திட்டமிடுவது குறித்து வியப்படையத் தேவையில்லை என்றும், நம்பிக்கைக் கூட்டணியும் பி.கே.ஆர் கட்சியும் நாடு முழுவதும் உள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் களப் பணியாற்ற ஏற்கனவே தயாராக இருப்பதாகவும் பிகேஆர் இளைஞரணியின் தகவல் தொடர்பாளர் டெனிஷ் ஹைருடின் தெரிவித்துள்ளார். தேசிய முன்னணி தன்னை பலமானதாகக் காட்டிக் கொள்ள விரும்பினாலும், மற்ற கட்சிகளுடன் இணக்கத்தைப் பேண விரும்புவது அவர்களின் உள்முரண்பாட்டையும் இன்னும் முழுமையாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளாத பலவீனத்தையுமே காட்டுகிறது என்று அவர் விமர்சித்துள்ளார்.
தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 'TERAS' தேர்தல் மேலாண்மை முறையைத் தங்கள் கட்சி அறிமுகப்படுத்தியுள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், மக்கள் பழைய அரசியல் சூழ்ச்சிகளைத் தவிர்த்து, உண்மையான நற்பணியையும் நேர்மையான நிர்வாகத்தையுமே தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








