தைப்பிங் சிறைச்சாலையை புதிய வளாகத்திற்கு இடமாற்றம் செய்யும் திட்டம் தற்போது அரசாங்கத்திடம் இல்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்கம் இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், பாதுகாப்பு அம்சங்கள், நிர்வாகத் தேவைகள், கைதிகளை தங்க வைக்கும் கொள்ளளவு, தற்போதைய கட்டிடங்களின் நிலை, அரசாங்கத்திற்கு ஏற்படும் நிதிச் சுமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, சிறைச்சாலை வசதிகளை மேம்படுத்துவது, விரிவுபடுத்துவது அல்லது மாற்றுவது தொடர்பான தேவைகளை சிறை நிர்வாகம் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகவும் சைபுடின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டு, ஜனவரி 17-ஆம் தேதி நடந்த தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பாக, மனித உரிமை ஆணையமான சுஹாகாம் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் மற்றும் பரிந்துரைகளை அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாகவும், அவை தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சைபுடின் இஸ்மாயில் விளக்கமளித்துள்ளார்.








