நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரசாரத்தில், மாநிலத்தின் அரச குடும்பம் தொடர்பான விவகாரங்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது நிலவி வரும் அரச குடும்ப விவகாரம் குறித்து தேர்தல் பிரச்சார களத்தில் பேச வேண்டிய அவசியமே இல்லை என்றும், நெகிரி செம்பிலானின் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் அரச மன்னராட்சி அமைப்பு மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், நெகிரி செம்பிலானில் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளையோ யாங் டி-பெர்துவான் பெசார்நான்கு உண்டாங்களின் அதிகாரத்தையோ, தம்பின் துங்கு பெசார் பதவியையோ தாம் ஒருபோதும் நிராகரித்ததில்லை என்றும், இந்த விவகாரத்தில் எந்தவித குழப்பமும் ஏற்படக் கூடாது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தேர்தல் பிரச்சாரத்தில் அரச குடும்பத்தை ஈடுபடுத்தக்கூடாது என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் ஒப்புக்கொண்டதாக நேற்று இரவு கோலா பிலா, டத்தாரான் மேலாங் பகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் போது அன்வார் இதனைத் தெரிவித்துள்ளார்.








