பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு
பினாங்கு மாநில ஆளுநர் ராம்லி நிகா தாலிப் உடன் இணைந்து நடத்தும் அதிகாரப்பூர்வ ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால், இவ்வாண்டு கொண்டாட்டமானது எளிமையான முறையில் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும், இந்த ஹரி ராயா திறந்த இல்ல நிகழ்வானது, ஒருபோதும் ஆடம்பரமாக நடத்தப்படவில்லை என்று பினாங்கு முதல்வர் சாவ் கோன் இயோ தெரிவித்துள்ளார்.
மக்கள் உடன் நெருக்கமாக சந்தித்து உரையாடும் ஒரு பாரம்பரிய நிகழ்ச்சியாகவே இது நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு உள்ளூர் பாரம்பரிய உணவுகள் வழங்கப்படுவது முக்கிய அம்சமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அரசாங்கத்தின் மற்ற இலாக்காக்களிலும் திறந்த இல்ல உபசரிப்பை எளிமையாக நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சாவ் கோன் இயோ தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போர் சூழல் காரணமாக, மலேசியாவில் இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகில் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








