"நமது வருங்காலத் தலைமுறையினரின் வாழ்வைப் பாதுகாத்திட, மத்தியில் உள்ள தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தைப் பலப்படுத்த வேண்டும்; அதற்கு முதற்கட்டமாக மாநில அரசாங்கத்தை நாம் தக்கவைக்க வேண்டும்," எனப் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு அதிரடி அறைகூவல் விடுத்துள்ளார்.
மாநிலத்திலும் மத்தியிலும் ஒரே நேர்க்கோட்டில், பரஸ்பர ஒத்திசைவுடன் செயல்படும் அரசாங்கங்கள் அமைந்தால் மட்டுமே மக்கள் சுபிட்சமான மற்றும் நிலையான வாழ்வைப் பெற முடியும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எஸ். முகுந்தனை ஆதரித்து, நேற்றிரவு சிரம்பான் ஜெயா, 'ஹேப்பி சிங் கீ' உணவகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே டத்தோஸ்ரீ சுந்தராஜூ இவ்வாறு வலியுறுத்தினார்.

சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் மிகத் துடிப்பான இளைஞரான எஸ். முகுந்தனின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியச் சக்தியாக இத்தொகுதியில் உள்ள 27 விழுக்காடு இந்திய வாக்காளர்களே விளங்குகிறார்கள்," என்று தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பினாங்கு, பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

"மலேசிய இந்தியர்களின் ஒட்டுமொத்த நலன், தமிழ் மொழி மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றைத் தற்போதைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தினால் மட்டுமே முழுமையாக உறுதி செய்ய முடியும்" என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
துடிப்பான இளைஞரான முகுந்தனுக்கு இந்திய வாக்காளர்கள் தங்களின் பேராதரவை வழங்கி, அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் குமரன் கிருஷ்ணன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.








