பிகேஆர் கட்சியின் புதிய தேர்தல் இயக்குநராக அக்கட்சியின் துணைத் தலைவர் அமிருதின் ஷாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் உள்துறை அமைச்சரும், பக்காத்தான் ஹராப்பான் பொதுச்செயலாளருமான சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.
இதன்மூலம், அக்கட்சியின் துணைத் தலைவரான நூருல் இசா அன்வார் அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் குறித்து பிகேஆர் பொதுச் செயலாளர் ஃபுசியா சாலே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு கட்சியின் பணிச்சூழலை மேலும் சீர்படுத்தவும், ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், கட்சியின் தேர்தல் இயந்திரத்தின் திறன் மேம்பாடு மற்றும் பணிச்செயல்முறைகளை வலுப்படுத்தும் முக்கிய பொறுப்பில் நூருல் இசா அன்வார் கவனம் செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடிப்படை உறுப்பினர்களின் திறனை வளர்த்தெடுப்பதன் மூலம் PKR கட்சியின் வலிமை அனைத்து நிலைகளிலும் தொடர்ச்சியாக கட்டியெழுப்பப்படும் என்றும் ஃபுசியா சாலே தெரிவித்துள்ளார்.








