மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் உலகளவில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், மலேசியாவின் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை அல்-முத்தாகின் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்மா தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மலேசியாவில் எரிசக்தி விநியோகமானது போதுமான அளவில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக நாட்டின் துணைப் பிரதமரும், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்றத்துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ பாடில்லா யூசோப், உலகளாவிய விநியோக நெருக்கடி காரணமாக பொருளாதாரச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எரிசக்தி செலவுகளும் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கும் முயற்சியில் அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளையில், தற்போது நாட்டின் எரிசக்தி விநியோகமானது, வரும் ஜூலை மாதம் வரை போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், வெளிநாடுகளிலிருந்து கூடுதல் விநியோகங்களை பெறும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாடில்லா யூசோப் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், தற்போது கிடைத்து வரும் விநியோகங்களைப் பெறுவதற்காக, ஆப்பிரிக்கா வரை செல்ல வேண்டியிருந்தாலும் கூட, அயராது உழைத்து வருவதாக அன்வார் தெரிவித்துள்ளார்.








