உலகளாவிய விநியோக நெருக்கடி, புவிசார் அரசியல் காரணங்கள், கட்டுமானத் துறையில் செலவுகள் அதிகரிப்பு இவற்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் எந்தவொரு அரசு கட்டுமானத் திட்டங்களையும் நிறுத்தவோ அல்லது தள்ளிவைக்கவோ போவதில்லை என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.
கட்டுமானத் துறையினர் எதிர்கொள்ளும் செலவு அழுத்தங்களைக் குறைக்க அரசு பல்வேறு குறுகிய, நீண்டகால தணிப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும், தற்போது வரை கடுமையான தலையீடுகள் தேவைப்படும் சூழல் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்டுமானத் துறையில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள அரசுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையிலான செலவுப் பகிர்வு முறை போன்ற அணுகுமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.








