புத்ராஜெயா, பிப்ரவரி.08-
மலேசியா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில், பல்வேறு முக்கிய துறைகள் சார்ந்த 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. புத்ராஜெயாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற கூட்டுக் செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த முக்கியத் தகவலை வெளியிட்டார். இந்த ஒப்பந்தங்கள் ஊடகத் தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, ஊழல் தடுப்பு, தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கியுள்ளன.
மேலும், அனைத்துலக அமைதி காக்கும் பணிகள், செமிகண்டக்டர் தொழில்நுட்பம், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியத் துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளன. ஆசியான் அமைப்பின் பின்னணியில், இந்தியாவின் பெரும் பொருளாதார வளர்ச்சியால் மலேசியா பல நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார். 2025-ஆம் ஆண்டில் எட்டப்பட்ட 18.59 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைத் தாண்டி, இரு நாடுகளும் புதிய வாய்ப்புகளைத் தேட இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








