ஷா ஆலாம், பிப்ரவரி.08-
மலேசியாவின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்துவதில் தனது கட்சி உறுதியாக இருக்கும் அதே வேளையில், இந்திய சமூகத்தின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.
நேற்று சிலாங்கூர், தாமான் மெலாவாத்தியில் உள்ள MPAJ மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் பிகேஆர் மாநாட்டில் பேசிய அன்வார், மலேசியாவின் இனம் மற்றும் மதம் சார்ந்த பன்முகத்தன்மை என்பது அரசியலுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல, மாறாக அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அரசியல் யதார்த்தம் என்ற நம்பிக்கையில்தான் பிகேஆர் உருவானது என்று சுட்டிக் காட்டினார்.
மலேசியாவில் வாழ்வதற்கு நாம் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இபான், கடசான் என அனைவரையும் பாதுகாக்க வேண்டும். நாம் ஒரே சக்தியாக வெற்றி பெற வேண்டுமானால், அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குரல் இருக்க வேண்டும், என்று பிகேஆர் கட்சித் தலைவருமான அன்வார் கூறினார்.
மேலும், மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக இருப்பதையும், இஸ்லாம் கூட்டரசு மதமாக இருப்பதையும் குறிப்பிட்ட அவர், அதே நேரத்தில் இது மற்றவர்களுக்குமான நீதி மற்றும் மரியாதையுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதை தமது உரையில் வலியுறுத்தினார்.








