ஈப்போ, மே.24-
வரவிருக்கும் 16-வது பொதுத் தேர்தலில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியிலேயே போட்டியிட வேண்டும் என்று பேரா மாநில பிகேஆர் கட்சி வலியுறுத்தியுள்ளது. மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தவும், அதிகமான நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை வெல்லவும் பிரதமரின் வருகை அவசியம் என்று மாநில பி.கே.ஆர் தலைவர் முஹமட் ஹைருல் அமீர் சப்ரி தெரிவித்தார்.
அன்வார் எங்கு போட்டியிடுவார் என்பது தேர்தல் நெருக்கத்தில் மட்டுமே முடிவாகும் என்றாலும், வடக்கு பகுதியில் ஆதரவை மேம்படுத்த அவர் தம்பூனிலேயே இருப்பது சிறந்தது என்று அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், கட்சியின் சில கிளைகளில் ஏற்பட்ட சிறிய அளவிலான பதவி விலகலால் மாநிலக் கட்சி அமைப்பில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.








