மலேசிய சீன சமூகத்தினர் உள்ளிட்ட வாக்காளர்கள் இனி எந்தவொரு அரசியல் கட்சிக்கும் 'உறுதியான ஆதரவாளர்கள்' என்று கருதப்பட முடியாது என மசீச பொதுச்செயலாளர் டத்தோ சோங் சின் வூன் தெரிவித்துள்ளார்.
மசீச-வின் 77-வது ஆண்டு நிறைவு விழாவில் இன்று உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற சபா மாநிலத் தேர்தல் ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். "வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுபவர்களைத் தண்டிக்க வாக்காளர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை அந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது, என்று சோங் சின் வூன் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், "வாக்காளர்களின் ஆதரவை, குறிப்பாக சீன சமூகத்தின் ஆதரவை, இனி எந்தக் கட்சியும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு அவை நிறைவேற்றப்படாவிட்டால், வாக்காளர்கள் நிச்சயமாக நமக்கு ஒரு பாடத்தைப் புகட்டுவார்கள்," என்றார்.
தற்போதைய அரசியல் சூழலில் ஜசெக மீதான பொதுமக்களின் அதிருப்தி, அன்றாட உரையாடல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக மிகத் தெளிவாகத் தெரிவதாகவும் சோங் சின் வூன் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.








