மனாமா, நவம்பர்,07-
மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம், மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக நேற்று பஹ்ரைன் சென்றடைந்தார்.
சவுதி அரேபியாவில் நான்கு நாட்கள் அரசு முறைப் பயணத்திற்குப் பிறகு, நேற்று ரியாட்டில் உள்ள கிங் காலிட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பஹ்ரைன் சாகீர் விமானத் தளத்தைச் சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு, மாட்சிமை தங்கிய பஹ்ரைன் மன்னர் ஹமாட் பின் இசா அல் காலிஃபா தலைமையில் சிவப்புக் கம்பள வரவேற்புடன் கூடிய அரச மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், பஹ்ரைன் இளவரசரும், பிரதமருமான சல்மான் ஹமாட் அல் காலிஃபா, தேசிய காவல் படைத் தளபதி ஷைக் முகமட் இஸா அல் காலிஃபா மற்றும் மற்ற பஹ்ரைன் இளவரசர்களும் கலந்து கொண்டனர்.
மாமன்னருடன் சுல்தான் இப்ராஹிமுடன், அவரது புதல்வர்களும், மலேசியத் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் மற்றும் இஸ்தானா நெகாரா அரண்மனையைச் சேர்ந்த கணக்காளர் டான் ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானியும் உடன் சென்றனர்.
1974-ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக மலேசிய மன்னர் ஒருவர் பஹ்ரைனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதால், இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவின் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.








