சிரம்பான், ஜூலை.28-
இந்திய சமூகத்தைக் கிள்ளுக்கீரையாக நினைத்து, இனதுவேஷ கருத்துக்களை வெளியிட்டு, வரும் கெடா மந்திரி பெசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான சனூசி நோருக்கும், அவர்களின் பெரிக்காத்தான் நேஷனலுக்கும் சரியான சாட்டையடிக் கொடுக்க பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை தேர்வு செய்து, நெகிரி செம்பிலானில் ஒருநிலையான ஆட்சிக்கு மக்கள் வித்திட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு கேட்டுக் கொண்டார்.
சிரம்பான் ஜெயாவில் ஜசெக. சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் எஸ். முகுந்தனை ஆதரித்து, சிரம்பான் ஜெயாவில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாபாராய்டு இதனைத் தெரிவித்தார்.
ஒரு நிலையான அரசாங்கத்தால் மட்டுமே மக்களின் பொருளாதார வளத்தையும் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உறுதி செய்ய முடியும் என பாபாராய்டு வலியுறுத்தியுள்ளார். எனவே, மாநிலத்தில் ஒரு சுபிட்சமான வாழ்க்கையை உறுதி செய்து கொள்ள, மக்கள் அனைவரும் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.








