நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்புச் சர்ச்சைக்கிடையே, துங்கு நாட்சருதீன் அம்மாநிலத்தின் 12-வது யாங் டி-பெர்துவான் பெசாராகப் பிரகடனப்படுத்தப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மலாக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில், நெகிரி செம்பிலானின் நான்கு உண்டாங் தலைவர்கள் சார்பாக ஜெலுபு உண்டாங் டத்தோ மாரோஃப் மாட் ரஷாத் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நெகிரி செம்பிலான் அரச சபையான ‘டேவான் கெஅடிலான் டான் உண்டாங்’ அமைப்பின் சிறப்புக்கூட்டத்திற்கு சிரம்பான் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் இந்தக் காணொளி வெளிவந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிடப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த துங்கு நாட்சருதீன் ஹோட்டலில் இருந்து வெளியேற முடியாமல் போலீசாரால் தடுக்கப்பட்டார்.
இருப்பினும், கூட்ட இல்லத்திற்குள் நுழைய முயன்ற நான்கு உண்டாங் தலைவர்களும் தொடக்கத்தில் தடுக்கப்பட்டு, பின்னர் துங்கு சையத் ராஸ்மான் தலையீட்டிற்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்பின்படி, மாநிலத்தின் மிக உயர்ந்த ஆட்சியாளரான யாங் டி-பெர்துவான் பெசாரைத் தேர்ந்தெடுக்கும் பிரத்தியேக உரிமை நான்கு உண்டாங் தலைவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








