நீலாய், ஜூலை.28-
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கெடா மந்திரி பெசார் சனுசி நோர் மற்றும் ரெம்பாவ் அம்னோ தொகுதி தலைவர் சுக்ரி சம்சுதீன் (Shukri Shamsuddin) ஆகியோர் விரைவில் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர்.
நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் Datuk Alzafny Ahmad கூறுகையில், இவர்களது பேச்சு தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு, குற்றவியல் சட்டப்பிரிவு 505 மற்றும் 1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடக சட்டப் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், "இந்தியர்களுக்கு இந்தியா உள்ளது, சீனர்களுக்கு சீனா உள்ளது, ஆனால் மலாய்க்காரர்களுக்கு இந்த மலாய் மண் மட்டும்தான் உள்ளது" என இனவாதத் தன்மையுடன் பேசியதாக சனூசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தனது பேச்சு அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சனுசி, இதற்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரப் போவதாக எச்சரித்துள்ளார்.
மற்றொரு நிலவரத்தில் நெகிரி செம்பிலான் அரச பரிபாலனத்தை, ஜசெக, கட்டுப்படுத்துவதாக வீடியோவில் பேசியிருப்பதாக கூறப்படும் ரெம்பாவ் அம்னோ தொகுதி தலைவர் Shukri Shamsuddin-னும் போலீஸ் விசாரணைக்கு ஆளாகியுள்ளார். Shukri Shamsuddin –னின் இந்த குற்றச்சாட்டை அரண்மனை வன்மையாக மறுத்துள்ள வேளையில் அவருக்கு எதிராக 11 போலீஸ் புகார்கள் பதிவாகியுள்ளதாக Datuk Alzafny Ahmad தெரிவித்தார்.








