சிரம்பான், ஜூலை.28-
வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், நெகிரி செம்பிலான் மாநில இந்திய வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து மகத்தான வெற்றி பெறச் செய்வார்கள் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எஸ். முகுந்தனை ஆதரித்து இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் இதனை வலியுறுத்தினார். இத்தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான முகுந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள்குமார் ஆகியோருக்கு சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றி சிறந்த அனுபவம் பெற்றவர் என்று ராயர் குறிப்பிட்டார்.
மக்களுக்குச் சிறப்பான சேவை ஆற்றக்கூடிய தகுதியைக் கொண்டுள்ள முகுந்தனின் வெற்றியைத் தொகுதி இந்திய வாக்காளர்கள் ஒன்றிணைந்து உறுதி செய்ய வேண்டும் என்று மேலவை உறுப்பினர் செனட்டர் லிங்கேஸ்வரனுடன் இணைந்து மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஆர்.எஸ்.என். ராயர் இக்கோரிக்கையை விடுத்தார்.








