Jul 25, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மாநிலத்தில்  பாரிசான் நேஷனல் கூட்டணியின் முதலீட்டு இலக்கை முறியடித்தது பக்காத்தான் ஹராப்பான் அரசு
அரசியல்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பாரிசான் நேஷனல் கூட்டணியின் முதலீட்டு இலக்கை முறியடித்தது பக்காத்தான் ஹராப்பான் அரசு

Share:

பாரிசான் நேஷனல் கூட்டணி தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஐந்து ஆண்டுகளுக்கான 30 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு இலக்கை, பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான நெகிரி செம்பிலான் மாநில அரசு வெறும் ஒன்றரை ஆண்டுகளிலேயே கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், இடைக்கால மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன், "நெகிரி செம்பிலான் மாநில அரசு கடந்த ஆண்டில் 19 பில்லியன் ரிங்கிட்டையும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே கிட்டத்தட்ட 13 பில்லியன் ரிங்கிட்டையும் முதலீடாக ஈர்த்துள்ளது. இதன் மூலம் பாரிசான் நேஷனல் கூட்டணியின் ஐந்து ஆண்டு கால இலக்கை நாம் மிகக் குறுகிய காலத்திலேயே தாண்டிவிட்டோம்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 10 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை இலக்காகக் கொண்டு தற்போதைய அரசு செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். மேலும், பக்காத்தான் ஹராப்பான் அரசு பி40 பிரிவினரோடு சேர்த்து, எம்40 பிரிவினருக்கும் உள்ளடக்கிய விரிவான சலுகைகளை நீட்டித்து வருவதாகவும் அமினுடின் தெரிவித்தார்.

Related News