கோலாலம்பூர், டிச.10-
நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு தமக்கு கிஞ்சிற்றும் சுயநலம் கிடையாது என்று ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரதமரை இவ்வாறு புகழ்ந்துரைப்பது மூலம் அமைச்சர் பதவி உட்பட அரசாங்கத்தின் உயர் பதவிகளை பெற வேண்டும் என்ற நோக்கம் தமக்கு அறவே கிடையாது என்பதையும் ராயர் விளக்கினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை தாம் அவ்வாறு ஒப்பிட்டுப் பேசியதற்கும், அதன் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் சில தரப்பினர் தமக்கு எதிராக வசைப்பாடி வருவது, தமது மனதை காயப்படுத்தியிருப்பதையும் ராயர் சுட்டிக்காட்டினார்.
டத்தோஸ்ரீ அன்வாரை கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் தாம் அறிந்து வைத்திருப்பதாக ராயர் குறிப்பிட்டார்.
ஓர் அடிப்படையற்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் சிறைவாசம் சென்றார். பின்னர் ரீபோமார்சி எனும் மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்து, போராட்டத்தை முன்னெடுத்தார்.
அன்வாரின் இந்த எழுச்சிமிகுந்த போராட்டத்தின் மகத்துவத்தை உணர்ந்த காரணத்தினால் உலகம் போற்றும் இரு தலைவர்களை முன்நிறுத்தி, அன்வாரின் போராட்டத்தை தாம் சித்தரித்ததாக ராயர் விளக்கம் அளித்துள்ளார்.








