கோலாலம்பூர், மார்ச்.06-
துருக்கியின் வான்பரப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஏவுகணைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கு மலேசியா தனது ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. தற்போதைய உலகளாவிய பாதுகாப்புச் சூழல் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளதாக மலேசியா குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துருக்கிய அதிபர் Recep Tayyip Erdogan- டன் நேற்று வியாழக்கிழமை இரவு தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.
ஈரானின் உயரியத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உள்ளிட்ட பல மூத்த தலைவர்களின் படுகொலைச் சம்பவங்கள் குறித்து பிரதமர் அன்வார் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். இத்தகைய போக்குகள் மேற்கு ஆசியாவை நீண்ட காலப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.








