கோலாலம்பூர், மார்ச்.06-
முன்னாள் உறுப்பினர்களுக்காக அம்னோ கதவுகளானது எந்த ஒரு நிபந்தனையுமின்றி திறந்திருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
புனித ரமலான் மாத உணர்வுகளில், "கடந்த கால தவறுகள் மற்றும் வேறுபாடுகள் அனைத்தும் மன்னிக்கப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரமலான் மாதத்தில், இஸ்லாமியர்களைப் பிரதிபலிக்கவும், உறவுகளைச் சரி செய்யவும், சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும், கட்சியின் பிணைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப சிறந்த வாய்ப்பாக அம்னோ கருதுவதாகவும் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
இந்த நல்லுணர்வின் போது, கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள், முன்னாள் உறுப்பினர்கள் என அனைவரும் மீண்டும் தங்களைக் கட்சியில் இணைத்துக் கொள்ள இது சரியான தருணம் என்றும் ஸாஹிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் இணைய விரும்பும் முன்னாள் உறுப்பினர்களைக் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டின் ஒருங்கிணைக்கவுள்ளார்.
முன்னாள் பெர்சத்து துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் உட்பட முன்னாள் உறுப்பினர்களை மீண்டும் வரவேற்கக் கட்சித் தயாராக இருப்பதாக கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி ஸாஹிட் அறிவித்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டில், பாரிசான் நேஷனல் கூட்டணியின் ஆட்சி கவிழ்ந்த பின்னர், அம்னோவிலிருந்து முக்கியத் தலைவர்கள் பலர் பெர்சத்துவுக்குத் தாவினர்.
இந்நிலையில், அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஸாஹிட் களமிறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.








