நாட்டில் மானிய விலையில் விற்கப்படும் பாக்கெட் சமையல் எண்ணெயை வாங்குவதற்கு, வரும் டிசம்பர் இறுதிக்குள் அடையாள அட்டையைப் பயன்படுத்தும் நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் துணை அமைச்சர் புசியா சாலே தெரிவித்துள்ளார்.
தற்போது, தகுதியானவர்கள் மட்டுமே இந்த மானியத்தைப் பெறுவதை உறுதி செய்ய 'QR கோட்' முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையை மேம்படுத்தும் விதமாக, அடையாள அட்டையை 'மைகாசி' (MyKasih) முனையங்களுடன் இணைக்கும் பணிகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்த ஒருங்கிணைப்புப் பணிகள் முடிவடைந்ததும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய தொழில்நுட்ப முறை முழுமையாகத் தயாராகி, சமையல் எண்ணெய்யை வாங்குவதற்கு மக்கள் தங்கள் அடையாள கார்டை பயன்படுத்த வேண்டி வரும் என்று அவர் குறிப்பிட்டார்.








