பெட்டாலிங் ஜெயா, மே.17-
அமைச்சரவையிலிருந்து விலகி ஓராண்டு கடந்த நிலையில், பிகேஆர் கட்சியைச் சேர்ந்த தலைவர்களான டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகிய இருவரும், மலேசிய ஐக்கியக் கட்சி எனப்படும் MUP-யை தங்களது புதிய அரசியல் தளமாக ஏற்றனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, இன்று பெட்டாலிங் ஜெயா நிகழ்த்துக்கலை மையத்தில் நடைபெற்ற அடையாளப்பூர்வ ஒப்படைப்பு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
MUP கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான Tan Gin Theam, கட்சியின் பதிவுச் சான்றிதழின் மாதிரிப் பிரதியை ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மி ஆகியோருக்கு வழங்கி அதிகாரப்பூர்வ மாற்றத்தை அறிவித்தார்.
‘Parti Bersama Malaysia’ என்றும் அழைக்கப்படும் MUP, பினாங்கைத் தளமாகக் கொண்ட, மக்களிடம் அதிகம் அறியப்படாத ஓர் அரசியல் கட்சியாகும்.
அக்கட்சியானது, கடந்த 2016-ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகப் பதிவுச் செய்யப்பட்டது.
இதற்கிடையில், இந்த அறிவிப்பானது, இன்று ஜோகூர் பாருவில் நடைபெற்று வரும் பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டுடன் ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறும் முதல் பக்காத்தான் ஹராப்பான் மாநாடு இதுவாகும்.
பிகேஆர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான ரஃபிஸி ரம்லியும், நிக் நஸ்மியும், கடந்த 2025-ஆம் ஆண்டு, மே மாதம் நடந்த பிகேஆர் உட்கட்சித் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட பூசல் காரணமாக, தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








