நாட்டில் வாழும் மலாய், சீனர், இந்தியர் அல்லது சபா, சரவாக் மக்கள் நாட்டின் எதிரிகள் அல்ல என்றும், மாறாக குறுகிய அரசியல் லாபத்திற்காக மக்களிடையே வெறுப்பையும் பிளவையும் தூண்டுபவர்களே நாட்டின் உண்மையான எதிரிகள் என்றும் தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் சாடியுள்ளார்.
"மலேசியாவின் வளர்ச்சி என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட இனத்தால் மட்டுமே உருவாக்கப்பட்டது அல்ல; மலாய் விவசாயிகள், சீன வணிகர்கள், இந்திய ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்தே இந்நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளனர்" என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தேசிய மொழியாக மலாய் மொழி விளங்கும் வேளையில், தமிழ் மற்றும் சீனம் உள்ளிட்ட மொழிகளும் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை வளப்படுத்துகின்றன என்று விவரித்த அவர்; ருக்குன் நெகாரா என்பது வெறும் வெற்று உறுதிமொழி அல்ல, அது நாம் அனைவரும் "பங்சா மலேசியா" என்ற ஒரே குடும்பமாக வாழ்வதற்கான கூட்டு வாக்குறுதி என்றார்.
மக்கள் எப்போதும் ஒற்றுமையாக இருந்தால் மலேசியாவைத் துண்டாடவோ, பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது என்றும் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் ஆவேசமாக முழங்கினார்.








