அரசு ஊழியர்களுடனான சந்திப்புகளின் போது எனது பேச்சின் தொனி சற்று கண்டிப்பானதாகவும் உணர்ச்சிப்பூர்வமானதாகவும் இருந்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மத்திய மண்டல அரசு ஊழியர்களுடனான 'சந்தாய் மெஸ்ரா' கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய அவர், "அன்வார், நீங்கள் இப்போது பிரதமர். குரலை உயர்த்தக் கூடாது, அமைதியாகவும் பண்பாகவும் மக்களிடம் பழக வேண்டும் என்று பலர் எனக்கு அறிவுறுத்துகிறார்கள். ஒரு பிரதமருக்குரிய முகம் இதுவல்ல என்று யாராவது நினைத்திருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
மேலும், தாம் உணர்ச்சிவசப்படுவதற்காக அப்படிப் பேசவில்லை என்றும், நாட்டின் நிலைமை குறித்துத் தனது மனதில் உள்ள உண்மையான ஆதங்கத்தையே வெளிப்படுத்தியதாகவும் பிரதமர் அன்வார் தெளிவுபடுத்தியுள்ளார்.








