போர்ட்டிக்சன், ஜூலை.21-
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஸாஹிட் ஹமிடி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு சவால் விடும் வகையில் பேசியது முறையற்றது என்று நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூண் தெரிவித்துள்ளார்.
மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் அன்வார் இப்ராஹிம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது. கூட்டரசு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ, தேர்தல் பிரச்சாரங்களின் போது சக கூட்டணிக் கட்சியினரைத் தாக்கத் தங்களுக்கு இருக்கும் பதவிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அவ்வாறு செய்பவர்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் சிரம்பானில் பேசிய ஸாஹிட் ஹமிடி, பிரதமருக்கு தங்களை பிடிக்கவில்லை என்றால் என்னையும், பிற பாரிசான் நேஷனல் அமைச்சர்களையும் பதவியில் இருந்து நீக்கலாம் என சவால் விடுத்தார். மேலும், பாரிசான் நேனஷல் அமைச்சர்கள் யாரும் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்துப் பேசிய அமினுடின் ஹரூண், பிரதமரின் பேச்சு அரசாங்கத்தின் ஒற்றுமையைக் காப்பதற்கான ஒரு நினைவூட்டல் மட்டுமே என்றார். பதவியில் இருந்து நீக்குவது இங்கு முக்கியமல்ல, மாறாகக் கூட்டணியில் உள்ள நட்பு மற்றும் ஒத்துழைப்பு உணர்வை மதிப்பதே முக்கியம் என்றும், பிரதமரின் அதிகாரத்திற்குச் சவால் விடுப்பது போன்ற இத்தகைய போக்குகள் கூட்டாட்சி அரசாங்கத்தின் உறவையும் பாதிக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








