2024 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக ஆவணக்காப்பக வாரத்தின் மாபெரும் கொண்டாட்ட விழா தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தலைமையில் இன்று சிறப்பாக நடந்தேறியது.
இன்று, வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, பி.ஜே நியூ டவூன், ஜாலான் யோங் சூக் லின் - னில் உள்ள சிவிக் எம்பிபிஜே மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த ஜூன் 9 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட இவ்விழாவானது, இளைய தலைமுறையினரிடையே ஆவணக்காப்பக குறித்த பங்களிப்பு மற்றும் அதன் முக்கியத்துவதை வலியுறுத்தவே மேற்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும் என்று சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ''Ini Warisan Kita'' கொள்கையானது நாட்டின் ஓர் அடையாளமாக திகழும் காப்பகப் பொருட்களை ஒரு பொக்கிஷமாகவும் பாரம்பரியமாகவும் பாதுகாக்கும் முயற்சியாகும் என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, தகவல் மற்றும் ஒற்றுமை உணர்வை கொண்ட ஒரு தலைமுறையினரை உருவாக்குவதை இந்நிகழ்ச்சி பிரதான கொள்கையாக கொண்டுள்ளது. உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் தொழில்நுட்ப ரீதியாக காப்பக நிபுணர்கள் தனித்து நிற்பதுடன் தம்மை அறிவார்ந்த ஒரு நபராக தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
''CyberArchive'' என்ற கருப்பொருளுடம் கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சி காப்பக துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றங்களை அடையாளம் காண்பிப்பதுடன் காப்பக நிறுவனங்களிடையே காப்பகப் பொருட்களை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதே ஆகும்.

மேலும், இந்நிகழ்விற்கு முத்தாய்ப்பிக்கும் வகையில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சகத்தின் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோப், தேசிய ஆவணக்காப்பகத்தின் ஆலோசகர் டான்ஸ்ரீ டத்தோ ஹாஜி அலிமுதீன் முகமது. கோம், தேசிய ஆவணக்காப்பகத்தின் இயக்குநர் டத்தோ ஜாபர் சிடேக் ஹெச்ஜே. அப்துல் ரஹ்மான் உட்பட பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் மேயர் துவான் ஹாஜி முகமது ஜஹ்ரி ஹாஜி சமிங்கோன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.









