கோத்தாகினபாலு, நவ. 19-
28 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் தம்மை எதிர்வாதம் புரிவதற்கு அப்பீல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து சபா மாநில பாரிசான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து தாம் விலக வேண்டும் என்று கோரி, கொடுக்கப்பட்டு வரும் நெருக்குதலைக் கண்டு தாம் அசரப் போவதில்லை என்று கினாபாத்தான் எம்.பி. டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தாம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய போதிலும் மாநிலத்திற்கு பாரிசான் தலைவர் என்ற முறையில் தொடர்ந்து கட்சியை வழிநடத்தி வரப் போவதாக மாநில அம்னோ தலைவருமான புங் மொக்தார் குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட தலைவர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்தொழிக்கும் வரையில் கட்சியில் தலைமைப்பொறுப்பை ஏற்பதிலிருந்து விடுப்பில் செல்ல வேண்டும் என்று சபா மனித உரிமை ஆர்வலர் ஜேம்ஸ் லிங்குஜான் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் புங் மொக்தார் எதிர்வினையாற்றினார்.
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தாம் ஆற்ற வேண்டிய பொறுப்புகளும் கடமைகளும் நிறைய இருப்பதாகவும், அவற்றிலிருந்து தன்னை யாரும் திசை திருப்ப வேண்டாம் என்று புங் மொக்தார் கேட்டுக்கொண்டார்.
15 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட பெல்கிரா பெர்ஹாட் முதலீட்டில் 28 லட்சம் வெள்ளி ஊழல் புரிந்ததாக புங் மொக்தாரும் அவரின் மனைவி ஸிஸி இஸெட் அப்துல் சமாட்டும் தற்காப்பு வாதம் புரிய வேண்டும் என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து புங் மொக்தார் பதவி விலக வேண்டும் என்று சபா மாநிலத்தில் அவருக்கு எதிரான எதிர்ப்பு தற்போது வலுக்கத்தொடங்கியுள்ளது.








