வரும் மாநிலத் தேர்தல்களில் வாக்களிக்கத் தங்களின் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பும் பணியாளர்களுக்குக் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களும் முதலாளிகளும் சிறப்பு விடுமுறை அல்லது தேவையான நேர அனுமதி வழங்க வேண்டும் எனச் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீனப் பேரவையான KLSCAH, மலேசிய இக்ராம் அமைப்பு, வலுவூட்டல் சமூக வழிகாட்டல் இயக்கமான ஏசிஇ மற்றும் பெர்சே ஆகிய 130-க்கும் மேற்பட்ட கூட்டமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த கூட்டு அறிக்கையில், முதலாளிகள் வழங்கும் இந்த ஒத்துழைப்பின் மூலமே தொழிலாளர்கள் தங்களின் மக்களாட்சிக் கடமையை முழுமையாக நிறைவேற்ற முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களின் வாக்காளர்கள் அனைவரும் தங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்தி, வாக்கின் மூலம் தங்களின் மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முன்வர வேண்டும் என இந்த இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன. "உங்கள் வாக்கை வீணாக்காதீர்கள்; ஒவ்வொரு வாக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது" என்று குறிப்பிட்டு, அனைத்து வாக்காளர்களும் தங்களின் ஜனநாயகப் பொறுப்பை உணர்ந்து தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என்று இந்த கூட்டு அறிக்கை நிறைவாகக் கேட்டுக்கொண்டுள்ளது.











