கல்வி கற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கினால் மட்டுமே எத்தகைய ஏழைகளும், வசதி குறைந்தவர்களும் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்று ஜோகூர் மாநிலத் தேர்தலின் பெக்கோக் சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டே யோக் ஜுவென் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டு காலமாக டியூஷன் ஆசிரியராகப் பணியாற்றி வரும் டே யோக் ஜுவென், பிள்ளைகளுக்குப் பல்கலைக்கழகம் வரை உயர்தரமான கல்வி வாய்ப்பைக் கொடுத்துக் கரை சேர்த்து விட்டால், ஒவ்வொரு குடும்பமும் வறுமை என்ற பிணியிலிருந்து விடுபட முடியும் என்பதால் தான் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தலில் ஜசெக சார்பில் பெக்கோக் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களம் களம் காணும் டே யோக் ஜுவென், பெக்கோக் தொகுதியில் தாம் சந்தித்த வாக்காளர்களிடம் பிள்ளைகளின் கல்விக்குத் தாம் வழங்கவிருக்கும் முன்னுரிமைகள் குறித்தே பிரதானமாகப் பேசியதாக 'திசைகள்' ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் உருக்கமாகத் தெரிவித்தார்.








