கோலாலம்பூர், ஜூலை.16-
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு பாரிசான் நேஷனல் உடன் பாஸ் கட்சியானது தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டதாக பெர்சாத்து தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் கூறிய கருத்தை பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் மறுத்துள்ளார்.
பாஸ் கட்சியின் துணைத் தலைவருமான சம்சூரி, இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலுக்கான தேர்தல் ஒத்துழைப்பு குறித்து பாரிசானுடன் ஆரம்பக் கட்ட பேச்சு வார்த்தை நடத்தத் தாமே அனுமதி வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்ற அரசியல் கட்சிகளுடன் நடைபெற்ற அனைத்து ஆரம்பக் கட்ட பேச்சு வார்த்தைகளும், தொடர்புகளும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவரான தமது ஒப்புதலைப் பெற்றே மேற்கொள்ளப்பட்டதாகவும் சம்சூரி மொக்தார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விவகாரங்கள் அனைத்தும் இன்று நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனல் உச்ச மன்றக் கூட்டத்தில் இறுதியாக அங்கீகரிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை பாஸ், வாவாசான், கெராக்கான் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு வழங்குவதற்கும் பெரிக்காத்தான் உச்ச மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது என்றும் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.








